Tuesday, January 14, 2014

`வம்சநாசம்' - நாட்டு பாப்பன்மாரே,இனி நிங்களுக்கு எனாய் போனும் ..?

                `நாட்டு ராஜாக்களே ..இனியும் உங்களுக்கு என்ன வேணும்..?

 
தமிழகத்தில் நம் கண்களுக்கு எதிரே நடைபெறும் ஒரு  `வம்ச நாசத்தை' நாம் கண்டுகொள்ளாமல் இருக்கிறோம்.யார் இந்த வம்ச நாசத்தை எதிர்நோக்குகின்றனர்?

  வேறு யாருமல்ல.ஆதி வாசிகள்தான்.பல  கோத்திரங்கள் ,நம்பிக்கைகள், வாழ்க்கை முறைகள், ஆசாரங்கள்,மொழிகள் மற்றும் உடைகள் இருந்தாலும்  அடிப்படையில் இவர்கள் ஒரே குலம்.

  ஆதிகால  மக்கள்  கள்ளம் கபடமில்லாதவர்கள். காட்டிலே பிறந்து, காட்டிலே வலம் வந்த மண்ணின் மைந்தர்கள். பிறப்பு முதல் இறப்பு வரை காடு அவனைத் தாய் போல் அரவணைத்துக் காக்கிறது.

  மூங்கிலை வெட்டிப் பிணைத்து அழகாய் அடுக்கி,சுவர் கட்டி, மண் பூசி,நீண்ட நாணல்களும் மூங்கில் இலைகளும் அடுக்கிக் கூரை வேய்ந்து , மண் குழைத்துத் தரை செய்து , அதில் சாணி  பூசித்  தனது   குடிசையை அமைத்தான்.அது அவனை மழை,காற்று, குளிர், காட்டு விலங்குகள் போன்றவற்றில் இருந்து  ஓரளவு காப்பாற்றியது.

  காடு அவனுக்கு இதயம். அதுதான் அவனது தெய்வம்.தினையும், வரி நெல்லும்,பஞ்சப் புற்களும் , காட்டு வள்ளிக் கிழங்குகளும் ,இலும்பிப் புளியும் ,அன்னாசியும் ஆரஞ்சுப்பழமும் ,கரும்பும், தானிக்காயும், காடன் பழமும், முள்முந்திரியும் ,நாவல் பழமும், சீதாப்பழமும், உணவாயின.சிறு விலங்குகளை,பறவைகளை அம்பும் வில்லும் கொண்டு வேட்டையாடி மாமிசமுண்டான்.பசியைப்போக்க மட்டுமே வேட்டையாடினான்.

   பாய்ந்து செல்லும் நீரோடைகள் மீனையும் தூய  நீரையும் கொடுத்தன .தரிசான வனப்பகுதியில் விவசாயம் செய்து  நெல்லும் ,கேழ்வரகும், கீரைகளும், காய்கறிகளும் பயிரிட்டான்.இடம்பெயர்ந்து விவசாயம் செய்ததால் வனப்பகுதி அழியாமல் பாதுகாக்கப்பட்டது.தீயிட்டுச் சுட்ட பகுதி மீண்டும் செழித்து வளர்ந்தது.அவனது விவசாயமும் வேட்டையும் சுயக் கட்டுப்பாட்டுடன் இருந்தது.ரசனைக்காக விலங்குகளைக் கொள்ளவில்லை. வியாபார நோக்கமும் அவனிடம் இருந்ததில்லை.

  போதுமென்ற மனமும் காட்டுத் தாயிடம் அன்பும், மரியாதையும் அவனிடம் இருந்தது.நிலவொளி வானத்தைப் பிரகாசிக்கச் செய்யும் நாட்களில் அவனது துடியும், தப்பு  மேளமும் வனத்தையே விழாக்கோலம் கொள்ளச் செய்யும்.ஆதிவாசி மங்கையர் இடப்பக்கம் கட்டிவைத்த கொண்டை  முடியில் காட்டுப் பூக்களை அணிந்து ,மார்பில் சேலை சுற்றிக்கட்டி ,பாசிமாலையும் வெள்ளி மூக்குத்தியும் அணிந்து மறைக்கப்படாத ஒற்றைத்தோள்  நிலவொளியில் மின்னிடக் கைகோத்து வட்டமாக நின்று நடனமாடி மகிழ்ந்தனர்.

  சிறுத்தையும் , யானையும், பாம்பும், இடிமின்னலும்  சூறாவளிக் காற்றும் ,வெள்ளமும் அவனுக்குப் பயத்தைக் கொடுத்தாலும் வனதேவதைகள் பாதுகாப்புக் கொடுக்குமென அவன் நம்பினான்.

  காலம் கடந்து சென்றது.சுதந்திரம் வெளியுலக மக்களுக்கு வந்தடைந்தது.பயமின்றி வாழ்ந்த ஆதிவாசிக்கு, ந்ம்மைப் போன்றவர்களிடமிருந்து பெரும் ஆபத்துக் காத்திருந்தது.விடுதலை பெற்ற மனிதனின் பேராசை காட்டைக் கொள்ளையடிக்கத் தூண்டியது.காட்டைப் பாதுகாக்க வேண்டிய அலுவலர்களும் , ஊழல் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் ஒத்தாசை செய்யக் காட்டுக்கு வந்தனர்.அவர்களைக் கண்டு வனதேவதைகள் மிரண்டு ஓடின.அன்றிலிருந்துதான் ஆதிவாசிகளுக்குத் துன்பம் தொடங்கியது.சுதந்திரத்தின் கசப்பான சுவையினையே நாம் அவர்களுக்கு அளித்தோம்.பட்ட, கைவசப்பூமி, குத்தகை, பத்திரப் பதிவு, விலைச்சீட்டு - இவ்வித கோல்மால்கள் ஆதிவாசிக்குத் தெரியாது.காடு பொதுவான சொத்து.அதற்கு எல்லைகளில்லை.அனைத்து மரங்களும் அரசனுக்குச் சொந்தம். பழங்களும், காய்களும் தங்களுக்குச் சொந்தம்.அதனால் மரங்களை வெட்டி வீழ்த்தக் கூடாது என அவன் தெரிந்து வைத்திருந்தான்.வாழ்ந்து முடித்து விழுந்த மரங்கள் அவனுக்கு விறகாகக் காட்டிலிருந்து தானாகவே கிடைத்தது.

  மரக்கொம்புகளில் சுவையான தேன் நிறைந்த கூடுகள் இறந்தன. கூட்டின்மீது துல்லியமாய் அம்பு எய்து ,அந்த அம்பில் கோத்திருக்கும் நீண்ட கோலினை ஒரு மண்பானையில் இறக்கி வைத்தால் தேன் பானையில் இறங்கி விடும்.கவனம் இல்லையெனில் கரடியும்,காட்டு எறும்புகளும் தேனைத் திருடிவிடும்.

  நாட்டுவாசி காட்டுக்குள் நுழைந்தான்.அவனது கண்கள் ஆசையோடு அனைத்தையும் பார்த்தன.தேனும், தினையும்,தேன்நிறப் பெண்களும் மரங்களும் ,காட்டுவிலங்குகளின் மாமிசமும்,வாசனைப் பொருள்களும் அவனின் பேராசையைத் தூண்டியது.சாத்தானின் கால்கள் காட்டுக்குள் சென்று கலைத்தது.ஆனால் காட்டுவாசிகளின் கண்ணீரோ காட்டை நனைத்தது.

  சுதந்திர இந்தியாவின் வனபூமி அழிய ஆரம்பித்தது.காட்டை வெட்டி,நாசமாக்கி,விவசாயம் செய்து.. கொஞ்சம் கொஞ்சமாகக் காடுகள் கரைய ஆரம்பித்தன.நாட்டிலிருந்து வந்தவன் காட்டில் இருந்தவனிடம் விலைக்கு நிலம் கேட்டபோது , அமெரிக்காவின் சியாட்டில் கோத்திரத் தலைவனைப் போல் பதறினான்.`இந்த நிலம் விற்பது எங்ஙனம்..? ஆகாயத்தை விற்க முடியுமா..? - அதே போலத்தானே காடும்'.

  நாகரிக மனிதனுக்கு இது நன்றாகத் தெரியும்.அவன் பணத்தைக் கொடுத்து ஆதிவாசியை விரட்டினான்.பிற்பாடு, பணம் கொடுக்காமலே ஆசைகாட்டி விரட்டினான்.ஆசைவார்த்தைகளுக்கும் ,போதைப் பொருள்களுக்கும் தன முன்னால் நீட்டப்பட்ட வெள்ளைத்தாளில் பெருவிரல் அடையாளமிட்ட ஆதிவாசி காட்டை இழந்தான்.உத்தரவு, ஒப்பந்தம்,பயமுறுத்தல், சாராயம், கொஞ்சம் காசு - எழுத்தறிவில்லாத ஆதிவாசியின் முன்னால் சட்டதிட்டங்கள், கடவுளின் பேரால் உறுதிமொழி எனப் பல முறைகளில் ஏமாற்றப்பட்டான்.அவனது காட்டுக் கடவுள்கள், இயற்கைத்  தெய்வங்கள் எல்லாமே காட்டை விட்டு வெளியேற்றப்பட்டு நாகரிக மனிதனின் கான்கிரீட் கோவில்களில் குடிகொண்டன.

  மீண்டும் நாம் முன்னேற்றப் பாதையை நோக்கிச் சென்றோம்.வனத்தை அழித்தோம்.நவீனச் சாலைகள் ஆதிவாசி முன்னேற்றம் என்ற பெயரில் அவர்களைக்கொண்டே மரங்களை வெட்ட வைத்து லாரி லாரியாகக் கடத்தினோம்.வனதேவதையின் ஆருயிர்ச் சந்ததிகள் இயற்கை வளத்தையும்,சுற்றுச்சூழலையும் பாதுகாத்து ,மழையைத் தவறாமல் தந்து உதவிய மரங்கள் ஆயிரக்கணக்காக மலையிறங்கி வந்து கடத்தல் பேர்வழிகளின் ,அராஜகவாதிகளின் பணப்பைகளைப் பெருகச் செய்தது.காடு நாடாகியது.புது அரசியல் கட்சிகள் புதுமண்ணில் முளைத்தன.வளர்ந்து படர்ந்தன.சாலையோரங்களில் கைகால்கள்   வெட்டப்பட்ட மரங்கள் ஆச்சரியக் குறி போல நின்றன.காலநிலை மாறியது.பச்சைச் சேலை கட்டிவந்த வனச் சோலைகள் வெட்டி விதவையாக்கப் பட்டன.காடு நிர்வாணமானது.

  இந்த மாற்றங்கள் ஆதிவாசியின் கண்களில் திகைப்பை ஏற்படுத்தியது. பயம் அவனை ஆட்கொண்டது. அவனது நிலம் அன்னியர் கையில். உண்டு உறவாடி ஒரே இடத்தில் வாழ்ந்த பெண்கள் ஆசைவார்த்தை காட்டப்பட்டு  நயவஞ்சகர்களால்  நாடுகடத்தப் படுகின்றனர்.அவன் வணங்கி வந்த கடவுள்களும் துணைக்கு வரவில்லை.மண்ணை இழந்தவர்களின் ஏக்கக்குரல் கேட்கிறது.அவர்களின் அருமைக்குழந்தைகள் ,பசிபடர்ந்து பழகிப் போன ஆதிவாசிப் பள்ளியில் மதிய உணவுக்காகப் பரட்டைத்தலையும் கிழிந்த கந்தலுமாகக் காத்திருக்கின்றனர்.ஆதிவாசி வாலிபர்கள் சந்தனமரக் கடத்தலிலும் , கள்ளச்சாராயம் காய்ச்சுவதிலும் ஈடுபடுத்தப் பட்டுப் பொலிசாரால் கைது செய்யப்பட்டுத் துன்புறுகின்றனர்.ஆனால் , அவர்களை அச்செயல்களில் ஈடுபடுத்தியவர்கள் ,காவலர்களோடு கைகோத்து விலையுயர்ந்த கார்களில் பயணம் செய்கின்றனர்.

  நாம் இந்த மக்களைச் சோம்பேறி,குடிகாரன்,உதவாக்கரை என்றெல்லாம் ஏளனமும் கேலியும் செய்கிறோம்.இருப்பினும் அவர்களை இடைவிடாமல் சுரண்டிக் கொண்டிருக்கிறோம்.ஆதிவாசி பெயரைச் சொல்லிச்சொல்லி சொகுசு வாழ்க்கையில் சுயநலத் தொண்டர்களோடு இருக்கிறோம்.`எங்கள் வீட்டில் விஷேசம். உங்கள் ஆட்களோடு வந்து ஆட்டம் ஆடுங்கள்.- சாராயம் தருகிறோம் 'என அழைக்கிறோம்.

   மலைகளும் ,காடுகளும் சமயத்தின் அடிப்படையில் கூறு போடப்பட்டு,நீரோடைகளும் ஆறுகளும் காச நோயாளிகளாக்கப் பட்டு வெப்பமண்டலக் காடுகள் தீயிட்டுக் கொளுத்தப் பட்டு, சுற்றுச்சூழல் முற்றிலுமாகக் கெடுக்கப் பட்டபோது பல அரசியல்வாதிகளும் , மதத் தலைவர்களும், ஊழல் அதிகாரிகளும் கோடிகளைச் சுருட்டிக் குபேரர்களாக ஆனார்கள்.இந்தக் கோரச் செயல்களுக்கும் `ஆதிவாசி முன்னேற்றத் திட்டம்' என்ற செல்லப்பெயர் சூட்டப் பட்டது.போதாக் குறைக்கு மீண்டும்,மீண்டும் புதிய திட்டங்கள்,ஆடு வளர்த்தல், மாடு வளர்த்தல், தேயிலை விவசாயம்,புதிய வீடு கட்டுதல்,குடிசைத்தொழில், எழுத்தறிவு இயக்கம் ,ஆதிவாசி நிலச்சீர்திருத்தத் திட்டம்.

  இப்போது ஆதிவாசிகளின் நிலை என்ன..? அவர்களுக்கான நிதி எங்கே போய்ச் சேர்கிறது..?

  இந்த இழப்புக்கு எது ஈடாகும்..? காடுகளின் அழிவுக்கு , ஆறுகளின் களங்கத்துக்கு யார் பதில் சொல்லுவது..? அழிந்துவரும் ஆதிவாசி கலாச்சாரம் , மொழி உடை, கலைகள், -இவைகளைக் காப்பாற்றுவது எப்படி..? சூறையாடப்பட்ட ஆதிவாசிப் பெண்களின் அவலம், கள்ளச் சாராயத்தால் கருகிப் போன ஆதிவாசி ஆணின் உடல்வலிமை எவ்வாறு திரும்பி  வரும்..?

  ..................
  ..................
  ..................

    (  யாரோ ,எப்பொழுதோ எனக்குக் கையளித்த துண்டறிக்கையின் ஒரு பகுதி இது.முழுமையாய்க் கிடைக்கவில்லை.)

No comments:

Post a Comment