Saturday, August 28, 2010

மதம்

கவிதை ஒரு  மதம்
புண்ணியமும் பாவமும் கிடையாதிங்கு
பக்தனும் மறைநூலும் இல்லை..

நல்ல கவிதை எழுதாதவன்
நரகத்திற்குப் போவதில்லை..


கவிதையை நம்பியவன்
கூட்டம் சேர்வதில்லை ;மதம் மாற்றுவதில்லை
விக்கிரகங்கள் குறித்தான
கலகங்களில்லை
அடுத்தவன் கோவிலை இடிப்பதுமில்லை..

கவிதைக்காரன்
தனித்திருந்து நஞ்சருந்துகிறான்
தனித்தனியே சங்கிலியில் பிணைந்திருக்கிறான்
பைத்தியமாகிச் சாட்டையடி வாங்குகிறான்
பிரபஞ்சம் வாழப் பிரார்த்தித்துக் கொண்டே..

இந்த மதத்தில்
புழுவுக்கும் ஆன்மா உண்டு
புல்லுக்கும் வாழுரிமை உண்டு
நீர்த்துளிக்கும் நிரந்தரமுண்டு
எல்லாப் பொருளுக்கும் உயிருண்டு ..

எப்போதாவது கடவுள் வருகிறார்
வார்த்தைகளில் அப்போது
மின்னலின் பேரொளி ..

அந்த அதிர்வுகளை
ஓசையா மௌனமா என்றறிய
வாசகன் தேடுவான்

கடவுளைக் காண்பான்
அதிர்வுகளையும் மொழியின் ரகசியங்களையும் ..

கவிதை
எனக்கும் மதம்தான்
மதமில்லாதவனின் மதம்.
               {மலையாள மூலம் : சச்சிதானந்தன் }                                                 








 

2 comments:

  1. அருமையான கவிதை. அழகான மொழிபெயர்ப்பு.

    வாழ்த்துக்கள் அண்ணா.

    ReplyDelete