Saturday, December 8, 2012

..இராஜேந்திரா சலூன், என்.ஜி.ஆர் புரம்,இருகூர் (po) கோவை 641103.

    ..Naturals கடைக்குப் போயிருந்தேன்.துடியலூர் நீல்கிரிஸ் பல்பொருளங்காடியின் மேல்தளத்தில் இருந்தது அந்த முடிதிருத்தும் நிலையம்.கண்ணாடிக் கதவைத் தள்ளியதும் ஓடோடி வரவேற்பு முகப்புக்கு வந்த இளம்பெண்ணிடம் ‘முடி வெட்டணும்’என்றேன். ‘Ok..please be seated..' பதில் தந்தார் அவர்.
     கறுப்புச்சட்டை , கறுப்புப்பேண்ட் அணிந்திருந்த இளைஞர்  இன்னொரு கதவைத் திறந்துவைத்துக் கொண்டு “வாங்க சார்..’ என்றார்.உள்ளே நுழைந்தேன்.குளிரூட்டப்பெற்ற அறை.பரவியிருந்த நறுமணம் பரிச்சயமானதல்ல.சுவரைத் தவிர அனைத்தும் கறுப்பு. சுழல்நாற்காலி, கத்திரிக்கோல்,தெளிப்புநீர்ப்புட்டி-இன்னபிற சாதனங்கள் கறுப்புநிற ட்ரேயில் சீராக அடுக்கி வைக்கப் பட்டிருந்தன..
   
  பதிவு  1 :
     ‘
கொஞ்சம் ஷார்ட் பண்ணிடலாம் சார்-’ எனப் பதிலை எதிர்பார்க்காமல் சொல்லிவிட்டு வேலையைத் தொடங்கிய இளைஞனின் பெயர் பாலகிருஷ்ணன்.அடங்காத வாய் அருளப்பெற்ற நான் அவருடன் பேசத் தொடங்கிவிட்டேன்.
     தொண்டாமுத்தூர்ப் பக்கம் தேவராயபுரம் சொந்த ஊர்.அப்பா குடிநோயாளி.காட்டுவேலை அம்மாவுக்கு.பூர்விகச் சொத்தொன்று (வீடு + இடம் ) கிடைக்காமல் ஏமாந்ததால் தொற்றிக்கொண்ட குடியுடன் பித்தனைப் போல அலைகிறார் பெற்ற அப்பன்.ஆண்பிள்ளை சிங்கத்தைப் பெற்ற தாய் வீறாப்பாய்ப் பாடுபட்டு அழுக்குக் கலர் ஜீன்ஸ் பேண்ட்டும் ,கட்டங்கட்ட ஷார்ட் சர்ட்டுமாய் வாங்கிக்  கொடுக்க, +1-ல் படிப்பு ஏறாமல் நிறுத்திக் கொண்ட பாலு, தைரியமாய் உள்ளூர் முடிதிருத்தகத்தில் வேலைதேடிக் கொண்டார்.பேப்பர் படிக்கவந்த ஸ்கூல்பையன் வேலைகேட்டு நிற்பதைக் காணச் சகிக்காத சண்முகம் அண்ணன் பாலுவை அழைத்துக்கொண்டுபோய் ஸ்டார் பேக்கரியில் கிரீம்பன்னும்,டீயும் வாங்கிக் கொடுத்து ‘இந்தவேலை வேண்டாஞ்சாமி உனக்கு.. உங்கம்மா பாடு விடியணும்னா நீ டவுணுக்குப் போயிரு..ஏதாவது வேலைசெஞ்சு பொழச்சுக்க..அம்மாவைக் காப்பாத்து..’ - என அறிவுறுத்தியும் கேளாமல் பிடிவாதமாய் முடிதிருத்தும் கலையைச் சன்முகத்திடம் கற்றுக் கொண்டார்.’சொல்லிக் குடுங்கண்ணோ..சீக்கிரமே கத்துகிட்டு டவுணுக்குப் போயிருவேன்’- என்ற பாலுவின் உறுதியை எற்றுக்கொண்ட அவரையே நாளடைவில் விஞ்சும் வகையில் கலைநேர்த்தி கற்றுத் தேர்ந்தார்.
     நகரத்தில் வேலை கிடைப்பது சுலபமாக இருந்தது.ராஜகோபால் ஆசிரியர் திட்டிக்கொண்டே சொல்லித்தந்த ஆங்கிலம்,வாடிக்கையாளர்களிடம ஓரிரு வார்த்தைகளைத் தைரியமாகவும் சிறு வாக்கியங்களைத் தயங்கிப்பேசவும் நம்பிக்கை கொடுத்தது.
     ஒரு வி.ஐ.பி வாடிக்கையாளர் மூலமாகக் கிடைத்தது இந்த நாடுதழுவிய பேரியக்கமாம் Naturals-ல் சிகையழகு செய்யும் வேலை.திறமை சோதிப்பில் முதலிடம்.முதல் சம்பளம் கணபதி சில்க்சில் வாங்கிய பச்சைநிறச் சேலையானது அம்மாவுக்கு.எப்போதாவது போதம்திரும்பும் நன்னாளில் வீட்டில் தலைகாட்டும் அப்பாவுக்குச் சோறுபோட்டு ரூ100/- தந்து அனுப்புவார் அம்மா.’வீடு கெடச்சிரும்டி..பிரசரெண்டு ரவி கிட்டச் சொல்லியிருக்கறனாக்கும்..உட்ருவனா தகிடி..’எனக்கூவிக் கொண்டே போவார் அவர்.
    ‘ஒரு சின்ன ஆப்பிளிக்கேசன் சார்..’ என ஆரம்பித்தார் பாலு.’ஒரு பெட்டிசன் எழுதிக் குடுங்க..கலெக்டருக்குக் குடுக்கணும்..எப்படியும் முன்னுக்கு வந்திருவேன் சார்..டவுன்லயே கடைபோட்ருவேன்..நாலுபேருக்கு குடுக்கவும் முடியும் என்னால..ஆனா இப்ப அம்மா படுறபாட்டைப் பாக்கச் சகிக்கல சார்..வாடகைவீடு ஒழுகுது..ப்ளீஸ் சார்..’
    ‘முயற்சி எடுக்க வேணும்
      முடிவுபண்ணிப் பாக்கவேணும்..
       மக்களெல்லாம் ஒண்ணாச்சேர்ந்து ராசாக்கா
       மனுக் கொடுத்துப்பேசவேணும் அய்யாக்கா..
       -என்ற நாக்க மூக்க  சின்னப் பொண்ணு குரலில் வந்த கே.ஏ.குணசேகரன் பாட்டு நினைவுக்கு வந்தது..
      கலெக்டர்கிட்ட மனு கொடுத்தால் சகலவியாதிகளும் தீர்ந்துவிடும். எனும் பொதுப்புத்தியிது..
     ‘ஒரு நண்பரை அனுப்பறேன்..சொத்துப் பிரச்சினை..வேண்டிய உதவிகளைச் செய்யப்பா..’என்று அலைபேசியில் சொன்னேன் இலவசச் சட்ட உதவி செய்துதரும் வழக்கறிஞத் தம்பி சிவஞானத்திடம்.

பதிவு 2
   
     முடிந்ததும் எனது பெயர், அலைபேசிஎண் கேட்டார் பாலு.சொன்னேன்.உள்ளேபோய்த் திரும்பிவந்தார் பில்லுடன்.ரூ169/- எனப்போட்டிருந்தது ‘மெம்பர் ஆயிருங்க சார்..இண்டியால எங்க வேணும்னாலும் ஹேர்கட் பண்ணிக்கலாம்..20% டிஸ்க்வுண்ட் உண்டு.’என்றார்.
    நினைவு இருகூருக்குப் போனது.
    இராஜேந்திரா சலூன் ஊரில் பிரபலம்.வேலைகளுக்குப்போவோர் ஷிப்ட் அனுசரித்துக் கூடுமிடம்.அரசியல்,சினிமா,விளையாட்டு என விவாதங்கள் சூடுபறக்கும்.உள்ளே ஒரு தனியறையில் கேரம்போர்டு இருப்பது கூடுதல் ஈர்ப்பு.
    உரிமையாளர் ராஜேந்திரன் அண்ணன் பெருந்தன்மையாளர்.படிப்பு அதிகமில்லை.புத்தகங்கள்மீது ஏகப்பிரியம்.வாடிக்கையாளர் அமரும் நீளபென்ச்சின் பின்னால் வெள்ளை ட்வைன் நூலைக்கட்டிச் சிறுபுத்தகங்களைத் தொங்கவிட்டிருக்கும் முடிதிருத்தும் கடையைக் கற்பனைகூடச் செய்துபார்க்க முடியாது யாராலும்.அதில் உள்ளூரில் குடியிருந்துகொண்டு உலக இலக்கியம் படைத்துக் கொண்டிருக்கும் இளஞ்சேரல்,இசை,இளவேனில் போன்றோர் அன்பளித்த உயிர்மை,காலச்சுவடு,உயிர் எழுத்து, மணல்வீடு எனச் சிற்றிதழ்களும்  இருக்கும்.
    எதையாவது செய்துகொண்டிருப்பார் அண்ணன்.உதவி என அழைத்தால் உடனே வந்துவிடும் குணம் அவருக்கு.துக்கவீடுகளில் இரவெல்லாம் விழித்திருக்கும் சொந்தமல்லாத சொந்தம் அவர்.பதிலுதவி எதிர்பாராத அற்புத ஆன்மா.
    இலக்கிய நிகழ்ச்சிகள் என்றால் கேட்கவே வேண்டாம்.உதவிக்கரம் நீட்டக் கிளம்பிவிடுவார்.இருகூரில் மகாகவி பாரதிக்கு விழா எடுத்துக்கொண்டிருக்கும் அபூர்வப்பிறவிகள் உண்டு.கவிஞர் பா.மீனாட்சிசுந்தரம் குடியிருக்கும் பகுதிக்கு மகாகவி நகர் எனப் பலத்த எதிர்ப்புகளுக்கிடையில் பெயர் வைத்தது இவர்கள்தான்.
    பாரதி பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகள் நடந்துகொண்டிருக்கும்.ராஜேந்திரன் அண்ணன் நேராக இளஞ்சேரலிடம் வந்து ‘ராமு..பாக்கெட்ல பணம் எவ்வளவு இருக்கு உங்ககிட்ட..?’ என்பார்.’ஒரு அம்பதோ அறுவதோ தேறுமண்ணா..’பதில்தருவார் சேரல்.’சரி..ஒரு இருவது மட்டும் கொடுங்க..’என வாங்கிக் கொள்வார்.அவர்தவிர இசை,இளவேனில்,செல்வம்,கோபால் ஒருவரையும் விடமாட்டார்.
     மறுபடியும் இளஞ்சேரலிடம் வந்து ‘ ஒரு 150 வசூலாச்சு ராமு..கடைக்குப் போயி 15 நோட்டுப்புத்தகம் வாங்கி வந்துட்டேன்.குட்டையில குடியிருக்கற புள்ளைங்களுக்குக் குடுத்திரலாம்..நீங்களே போயி அமைப்பாளர்கள் கிட்டச் சொல்லி இதக் குடுத்திருங்க..இன்னைக்குப் பாரதியாரு பிறந்தநாளு..நாமும் எதையாவது செய்யணுமில்ல..’என்பார்.
     சிறுதொழில் சார்ந்து இயங்கும் குறுநகரமொன்றில் முடிதிருத்தும் கடை வைத்திருக்கும் ஓர் எளிய மனிதனுக்குள் குடியிருக்கிறது  பாரதியின் பேருள்ளம்..!
     துடியலூரில் முடிவெட்டிக்கொள்ள ரூ 180/- செலவானது கூடப் பரவாயில்லை.”இனிமே வரப்ப போன்ல அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிக்குங்க சார்..” என்ற வரவேற்பாளியின் அறிவுறுத்தலைத்தான் தாங்க முடியவில்லை..
    ‘வர மாட்டம்மா’ என்று சொல்லவில்லையே தவிர முடிவெடுத்துக்கொண்டேன்-இனி இங்கு வரப்போவதில்லையென.. அப்போது நினைவுக்கு வந்தீர்கள் ராஜேந்திரன் அண்ணா..!
     

2 comments:

  1. அற்புதமா பதிவுண்னே

    ReplyDelete
  2. அருமை அண்ணா. இது போல நிறைய எழுதுங்கள்..

    ReplyDelete