Friday, September 10, 2010

சாப்ளின் என்ற சர்வாதிகாரி .

   பேசாப் பொருளாய் இருந்த திரைப் படத்தைத் தனது அபூர்வ ஆற்றலால் பேச வைத்த திரை மேதை -சார்லி சாப்ளின் .
    மனிதம் அவரது மொழி .இரக்க சிந்தை ததும்பும் ஒரு வெகுளியாய்த் தெருக்களில் கோணல் நடை நடந்து ,வக்கற்றோர் வகையற்றோரிடத்தில் தன் அடையாளம் உணர்ந்து ,உதவி மகிழ்ந்த தனித்த வகை மாதிரியாய்த் திரை வலம் வந்தவர். 
      அளவிறந்த அன்பைத் தனது செய்தியாக்கியவர்.
      THE GREAT DICTATOR- அவரது திரைச் சாதனைகளில் ஒன்று.
      சம காலத்தில் வாழ்ந்த சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லரை ஊடக ஆயுதம் ஏந்தி எதிர்த்தவர்.திரைப் படைப்பாளிக்கு முதுகெலும்பின் முக்கியத்துவத்தை உணர்த்தியவர்.
      முடி திருத்தும் கலைஞன் ஒருவன் ஆள் மாறாட்டம் காரணமாகச் சர்வாதிகாரியாக அறியப்பட்டு,அவன் வாய் மொழி வேதத்தைக் கேட்க இலட்சக் கணக்கில் கூடியிருந்த கூட்டத்தில் பேசுவதாய் அமைந்திருக்கும் காட்சியில் இந்த வசனங்கள் {சொற்பொழிவாய்} இடம் பெற்றிருந்தன. இன்றைய நடப்புகளோடு இதைத் தாராளமாய் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம்.


மன்னிக்கவும் .நான் சர்வாதிகாரி அல்லன்.எனது வேலையும் அதுவன்று.
எவரையும் ஆளவோ,தோற்கடிக்கவோ நான் விரும்பவில்லை.


யூதன்,கருப்பன்,வெள்ளையன் - என எல்லாருக்கும் உதவ வேண்டும் என்பதே என் விருப்பம். 

ஒருவருக்கொருவர் உதவவே விரும்புகிறோம் - நாம் மனிதர்களாய் இருப்பதால்.

மற்றவர்களுடன் மகிழ்சியுடன்தான் வாழ விரும்புகிறோம்..துன்பங்களோடு அல்ல.ஒருவரையொருவர் வெறுக்க நாம் விரும்புவதில்லை.


இந்த உலகம் வளமை மிகுந்தது . செல்வங்களை அள்ளித் தருவது.


நமது வாழ்வு சுதந்திரமானது ; அழகியது. ஆனால் நாம்தான் மெல்ல மெல்ல அதனை இழந்து வருகிறோம்.


பேராசை ,மனிதனின் ஆன்மாவுக்குள் நஞ்சாய்ப் புகுந்து விட்டது .

வெறுப்பை வளர வைத்து இரத்தச் சகதியில் தள்ளி விட்டது .


வேகமாய் வளர்ந்திருக்கிறோம் .மனக் கதவுகளையோ மூடிக் கொண்டிருக்கிறோம்.

எந்திரங்கள் நம் தேவைகளைப் பெருக்கி விட்டன .

அறிவு அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது .ஆற்றலோ இறுகி மனிதத் தன்மையைக் குலைத்து விட்டது.


அதிகமாகச் சிந்திக்கிறோம். .குறைவாய்ப் பரிவு காட்டுகிறோம் .

எந்திரங்களை விட மனிதாபிமானமே இன்றையத் தேவை.


புத்திசாலித் தனத்தை விட அன்பும் ,கருணையும் உடனடியாகத் தேவை.


இவை இல்லாமற் போனால் ,வாழ்வு வன்முறை மயமாகி விடும்.


ஆகாய விமானங்களும்,வானொலியும் நம் உறவை நெருங்கச் செய்திருக்கின்றன.


இது போன்ற கண்டுபிடிப்புகள் மனிதனின் தேவை கருதி உருவானவை.; உலகளாவிய சகோதரத்துவத்தை ,ஒற்றுமையை வளர்ப்பவை.


இன்று என் குரல் ஏராளமான பேரைச் சென்றடைகிறது .

அவர்களெல்லாம் யார் ? வாழ்வில் நம்பிக்கை இழந்தோர், அச்சுறுத்தும் நடைமுறைகளால் பாதிப்படைந்தோர் ,சிறைப்பட்டோர் என்பவர்கள்தானே ? 

அவர்களுக்கெல்லாம் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் - நம்பிக்கை இழக்காதீர்கள் . 

துன்பம் நம் மீது படிந்துள்ள போதிலும் மனித குல உயர்வை விரும்பாத சிலரின் பேராசைதான் நம்மை ஆட்டிப் படைக்கிறது.


மனிதனின் வெறுப்பு மறைந்து போகும்.

சர்வாதிகாரிகள் இறந்து போவார்கள் .


இழந்த அதிகாரத்தை மக்களே மீளப் பெறுவார்கள் .

மனிதர்கள் அழிந்தாலும் விடுதலை வேட்கை அழியாதது .

எனதருமை வீரர்களே !

சுய சிந்தனை கொள்ளுங்கள். மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசுங்கள்

அதிகாரம் என்ற பெயரில் உங்களை அடிமை கொண்டவர்களை -இகழ்ந்து தூற்றியவர்களை -வேலையில் கசக்கிப் பிழிந்தவர்களை -ஆடு மாடுகளாய் நடத்தியவர்களை -வெறும் அம்புகளாய்ப் பயன்படுத்திக் கொண்டவர்களை எதிர்த்துக் குரல் கொடுங்கள் . 

அவர்களிடத்தில் உங்களை இழந்து விடாதீர்கள்.

ஏனென்றால் அவர்களின் இதயம் எந்திரத்தால் ஆனது ; அறிவு எந்திர மயமானது . 

நீங்கள் எந்திரங்கள் அல்லர்.கால்நடைகளும் அல்லர்.மனிதர்கள் நீங்கள்.மனிதத் தன்மை கொண்டவர்கள்.

வெறுப்பை உதறுங்கள்.

அன்பிலா இதயம்தான் வெறுப்பைச் சுமந்திருக்கும்.

போரை விடுதலைக்காக முன்னெடுங்கள் ; அடிமை கொள்வதற்காக அல்ல.

"கடவுளின் ராச்சியம் மனிதனுக்குள்'" என்கிறது விவிலியம் .

தனி மனிதர்கள் அல்ல.சமூக மனிதர்கள் நீங்கள்.


கருவிகளையும் மகிழ்ச்சியையும் கண்டுபிடிக்கும் ஆற்றல் உடையவர்கள்.


வாழ்வை இனிமையாக்கவும் ,அற்புதமாக்கவும் உங்களால் முடியும்.

குடிமக்கள் உரிமை என்ற பேரில் நாம் ஒன்றிணைவோம்.புத்துலகம் காணப் போராடுவோம். 

அந்த உலகம் உழைப்பை மதிக்கட்டும்.இளைய தலைமுறைக்கு நம்பிக்கையையும் ,மூத்தோருக்கு பாதுகாப்பையும் வழங்கட்டும். 

அதிகாரங்கள் இவற்றைத் தராது. சர்வாதிகாரம் அடிமையாக்குவதை மட்டுமே முதன்மைப் படுத்தும்.

நம்பிக்கைகளை விதைப்போம் நாம்.

நம்மைப் பிரித்திருக்கும் நாடு,பேராசை,வெறுப்பு,சகியாத் தன்மை என்ற தடைகள் அனைத்தையும் துறந்து பொருள் பொதிந்த உலகை உருவாக்குவோம்.

அறிவியலும்,முன்னேற்றமும்,நம்மை வழி நடத்தட்டும். 

படை வீரர்கள் ஜனநாயகத்தைக் காக்க முன்வரட்டும்.

ஒன்று படுவோம்.! 

நன்றி:

திரு.சக்திவேல் 
ஓவியர் .ஜீவா ,கோவை 




5 comments: