Wednesday, September 1, 2010

கடலோடி

     ..காவூரி ராமலிங்கம் அப்பல நரசய்யாவின் "கடலோடி"யை அந்தக் காலத்தில் வாசிக்கவில்லை.இதனை வெளியிட்ட  வாசகர் வட்டத்தின் பிற நூல்களான லா.ச.ராவின் அபிதாவும் கு.ப.ராவின் சிறிது வெளிச்சமும் படர்த்திய ஈர்ப்பை இது ஏன் தரவில்லை?
     இது கதை அல்ல என்பதுதான் காரணம் .கடலில் மாலுமியாகப்  பணியாற்றிய ஒரு பொறியாளரின் அனுபவப் பதிவு என்பதைத் தனித் தகுதி என அறியாமல் இதனை எட்டத்தில் வைத்தே {நூலக அலமாரியில்}பார்த்திருந்தாயிற்று .
       அண்மையில் படித்து முடித்த போது பெரும் வியப்பு ஏற்பட்டது .ஒரு காலத்தில் கணையாழி வாசகர்கள் [தாள் மேல் தாள் போட்டுக் கொண்டு]  தமிழின் முக்கிய டாப் 10 படைப்புகளில் இதை  ஏன் சேர்த்தார்கள் என்பதும் புரிந்தது.
           "நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி
             வளி தொழிலாண்ட - கரிகால் வளவனைப் புறநானூறு  பாடியதை  + ௨வில் படித்த ஞாபகம் .கிரேக்கம் வரை விரிந்திருந்த  தமிழனின் வணிகப் பரப்பில் கடல் வாழ்வு முக்கியப் பங்காற்றியிருக்கிறது.செல்வம் தேடி வெளியூர் செல்வதைப்" பொருள் வயின்" என்று சொல்லியிருக்கிறார்கள்.கடல் வழி செல்வதால் ஏற்படும் பிரிவைக் "கலத்திற் பிரிவு"என அழைத்தார்கள். செல் என்ற சொல்லில் இருந்து செலவு உண்டாயிற்று.
           எமது இலங்கைச் செலவு -என்று திரு.வி.க ஒரு பயணக் கட்டுரை எழுதியிருக்கிறார்.வழிச் செலவுக்குக் காசு கொண்டு போதல் CREDIT CARD கலியில் காணாமற் போய்விட்டது.
            திரை கடலோடிய நரசய்யா செல்வம் சேர்த்திருக்கிறாரா எனத் தெரியாது.அரிதான அனுபங்களை ஈட்டியிருக்கிறார்.இது இ.பா. சொன்னது.
            உண்மைதான்.பயணக் கட்டுரை எழுதும் பெருமக்கள் வெளி நாட்டுப் பிரமுகர்களுடன் தேநீர் குடித்ததைப் பற்றி விலாவரியாக விவரித்திருப்பார்கள்.கண்டதை ,கேட்டதை வைத்து மூங்கில் முறத்திற்கு சாணிப்பத்து  வைத்துப் பொத்தி விடுவது போல ஒப்பேற்றியிருப்பதைத்தான் கண்டிருக்கிறோம்.அது இதில் இல்லை.
          பூனாவில் கடற்படைப் பொறியாளருக் கான பயிற்சியின்  நான்கு ஆண்டுக் கால வாழ்வில் ,இந்திய நாடு வாங்கிப் புதுப்பித்துப் பயன் படுத்திய வெளி நாட்டுக் கப்பல்களில் பணியாற்றியது ,இந்தோ -பாக் போரில் பங்கேற்பு  என்பது வரை விரித்துப் பொருளுரைத்திருக்கிறார்.
          தனது நினைவலைகளுடன் தான் சென்ற நாடுகளைப் பற்றிய விவரங்களையும் சேர்த்திருக்கிறார்.  குறிப்பாக கடல் மட்டத்துக்குக் கீழே உள்ள நெதர்லாந்து நாட்டின் மக்கள் 
கடல் நீர் ஊருக்குள் வராமல் தடுக்கக் காப்புச் சுவர் கட்டியிருப்பதையும்,நீரை மேலாண்மை செய்து வேளாண்மைக்குப் பயன்படுத்தும் சவால் நிறைந்த வேலையை நூற்றாண்டுகளாகச் செய்து வருவதையும் விதந்து கூறியிருக்கிறார்.
          ஆச்சரியம். TITANNIC  கப்பல் பற்றிய சிறு குறிப்பும் இந்நூலில் வருகிறது.
           கடைசி அத்தியாயம் குறிப்பிடத் தக்கது.சங்கப் பாடல்களில் கூறப்பட்டுள்ள கடல் வாழ்க்கை ,இந்திய அளவில் கப்பல்கள் பற்றிய தகவல்கள் ஆகியவை இதில் காணக் கிடைக்கின்றன.நூலாசிரியரின் விரிந்த மனம் இப்பகுதியில் புலப்படுகிறது.
           படிக்காதவர்கள் புதிதாய்ப் படிக்கலாம்.படித்தவர்கள் மீண்டும் படிக்கலாம்.
 கூடுதல் குறிப்புகள் :ஒன்று .....படிக்க நினைப்போருக்கு......
             .....மற்ற படி இங்கிலாந்தின் லண்டனோ ,மதுரை ஜில்லாவின் உசிலம்பட்டியோ எனக்கு ஒன்றுதான்.
            .....பார்ப்பதற்கு அழகாகவிருக்கும் இக்கப்பலின் முந்தைய கொள்கை "நாசமுறுவோம்;தோல்வியுறோம்"{ DELETA,NON DELECTA} என்பதாகும்.
           .....கப்பல் மிதக்க வேண்டும்.மிதக்கக் கப்பல் கூட்டின் ஒற்றுமை அவசியம்.மிதந்தால்தான் நகரும்.நகர்ந்தால்தான் போர் புரிய முடியும்.அதுதான் எல்லைக் காவலின் அடிப்படை. ம்..இப்போது {கப்பலைத் துடைப்பம் கொண்டு} பெருக்கு.பார்க்கலாம்.
           .....ஒரு மாலுமிக்கு , தான் இருக்கும் கப்பல்தான் தான் கண்ட கப்பல்களிலேயே மோசமானது.கடைசியாக அவன் இருந்த கப்பல்தான் சிறந்தது.
          ......யவனர்கள் என்ற வார்த்தை கிரேக்க வார்த்தை  laones  என்பதிலிருந்து திரிந்ததாகத் தெரிகிறது.இப்பதந்தான் கிரேக்கர்களைத் தமிழ் மொழியில் தெரியப் படுத்திற்று.
         ......மாலுமிகள் ஒரு நாட்டின் தூதுவர்கள்.கப்பல் இந்நாட்டின் கொடியைக் காட்ட மற்ற நாடுகளுக்குச் செல்கிறது.நீங்கள் சாதாரண மாலுமிகள் அல்ல.இந்தியாவின் பிரயாணத் தூதுவர்கள்.
         .....நான் எழுதுவது பயணக் கட்டுரை அல்ல.பிரயாணம் எனது பொழுதுபோக்கு அல்ல.அது எனது தொழில்.
 கூடுதல் குறிப்பு:இரண்டு     சூழலிய வாதிகளுக்கு ...
            துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது ஒரு சிகரெட் டின்னைச் சரியாகக் குறி பார்த்துச் சுட்டபோது அளவிலாப் பெருமையும் நிறைவும் அடைந்தவர் ,ஒரு கழுதைப் புலியை விரட்டிச் சென்று சுட்டு வீழ்த்திய கூட்டத்தில் தானும் பங்கெடுத்துக் கொண்டதை வெட்கமாகக் கருதுகிறார்.
            ஆன்றோரே,சான்றோரே ,எம்மைப் போன்றோரே..!இதுதானே நம்ம செய்தி..

3 comments:

  1. அருமையான பதிவு.

    வலையுலகிற்கு வருக... வருக

    ReplyDelete
  2. இடப்பட்ட ஆறு வர்ஷங்களுக்குப் பின்னர் பார்க்க நேர்ந்தது. அவைநாயகன் யாரென அறியேன், ஆனாலும் அவ்ருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றிகள்,நரசய்யா

    ReplyDelete
  3. இடப்பட்ட ஆறு வர்ஷங்களுக்குப் பின்னர் பார்க்க நேர்ந்தது. அவைநாயகன் யாரென அறியேன், ஆனாலும் அவ்ருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றிகள்,நரசய்யா

    ReplyDelete